×

நீட் பாடம் நடத்துவதாக ஓட்டலுக்கு அழைப்பு ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: பதிலுக்கு குத்தியதில் வாலிபர் கவலைக்கிடம்

சேலம்: நீட் தேர்வுக்கு பாடம் சொல்லி தருவதாக கூறி, ஓட்டலுக்கு வரவழைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர், ஆசைக்கு இணங்க எதிர்ப்பு தெரிவித்ததால் கத்தியால் குத்தினார். பதிலுக்கு கத்தியை பிடுங்கி, இளம்பெண் சரமாரியாக குத்தியதால், வாலிபர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், சேலத்தில் தங்கி நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், புது பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, அவரது செல்போனில் பேலன்ஸ் இல்லாததால், வீட்டுக்கு பேசுவதற்காக அவ்வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க நபரிடம், செல்போன் தரும்படி கேட்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர் தன்னை தர்மபுரி மாவட்டம், அக்ரகாரம் எட்டிப்பட்டி அழகிரி நகரைச் சேர்ந்த சக்திதாசன்(39) என அறிமுகப்படுத்திக்கொண்டார். இளம்பெண்ணும், நீட் தேர்வுக்காக படித்து வருவதாக கூறி, தன்னை பற்றிய விவரத்தை அந்த நபரிடம் தெரிவித்தார்.

அப்போது, சக்திதாசன் தான் எம்.எஸ்சி., விலங்கியல் மற்றும் பி.எச்டி., படித்துள்ளதாகவும், நீட் தேர்வுக்காக உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, செல்ேபான் எண்களை பரிமாறிக் கொண்ட இருவரும், தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வுக்காக வைத்திருந்த கல்வி கட்டணத்தை தொலைத்து விட்டதாக, இளம்பெண் தெரிவிக்கவே அவருக்கு ரூ.4500ஐ சக்திதாசன் கொடுத்து உதவியுள்ளார். இதனிடையே, தர்மபுரியில் இருந்து தான் சேலம் வருவதாகவும், நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், தன்னிடம் கேட்குமாறு கூறிய சக்திதாசன், நேற்று முன்தினம் சேலம் வந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று காலை, தன்னுடைய அறைக்கு இளம்பெண்ணை வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு இளம்பெண் சென்றார். அப்போது, சக்திதாசன் நீட் ேதர்வு தொடர்பாக, இளம்பெண்ணுக்கு விளக்கி கொண்டிருந்தார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே சக்திதாசன், தான் ஏற்கனவே வைத்திருந்த கத்தியை காட்டி, ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இளம்பெண்ணை சக்திதாசன் கத்தியால் குத்தினார். இதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், சக்திதாசனிடம் இருந்து கத்தியை பிடுங்கி, அவரை சரமாரியாக குத்தினார். பின்னர், கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனை பார்த்த ஓட்டல் ஊழியர்கள், அழகாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சக்திதாசனையும், கையில் காயத்துடன் இருந்த இளம்பெண்ணையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சக்திதாசனின் நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. திருமணமாகாத சக்திதாசன், வீட்டு கடன், விவசாய கடனை வாங்கி கொடுத்து, அதன்மூலம் கிடைக்கும் கமிஷனை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post நீட் பாடம் நடத்துவதாக ஓட்டலுக்கு அழைப்பு ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: பதிலுக்கு குத்தியதில் வாலிபர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Aasi ,Aashi ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...